ஜாமக்காரன் தசமபாக வழக்கு ஒருதலைப்பட்சமாகத் தெரிந்ததால்..,- 002

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆபிரகாமின் தேவபக்தியை மெச்சிய தேவன் அவரை சகலவற்றிலும் ஆசீர்வதித்து வந்தார், ஆடுமாடுகள், பொன், வெள்ளியுடைய சீமானானார் என்கிறேன். ஆகையால் அவர் தசமபாகம் செலுத்தினார் என்றும் கூறுகிறேன்.

அரசு வக்கீல் : ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு எத்தனை முறை தசமபாகம் கொடுத்ததாக வேதம் சொல்கிறது ?
பாஸ்டர் ஜோன்ஸ் : எத்தனை முறை கொடுத்தார் என்று எழுதப்படவில்லை. ஒருமுறை கொடுத்ததைத்தான் வேதத்திலே படிக்கிறோம்.

அரசு வக்கீல் : அப்படியானால் ஆபிரகாம் மாதந்தோறும் தசமபாகம் கொடுத்தார் என்று சொல்ல முடியாது அல்லவா ?
பாஸ்டர் ஜோன்ஸ் : அப்படி எழுதப்படவில்லை.

அரசு வக்கீல் : சரி, மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் செலுத்தியவைகளை எங்கிருந்து பெற்றார் ?

பாஸ்டர் ஜோன்ஸ் : அவை அவருக்கு யுத்தத்தில் மீட்கப்பட்ட பொருளாக கிடைத்தவை.

அரசு வக்கீல் : அப்படியானால் அவரது சொந்த சம்பாத்தியத்திலிருந்து கொடுக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆம், வழக்கமான சம்பாத்தியத்திலிருந்து அதை கொடுக்கவில்லை என்று தோன்றுகிறது.

அரசு வக்கீல் : ஆக ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தது அவர் யுத்தத்தில் பெற்ற பொருள்களில் இருந்தே கொடுத்துள்ளார் என்றும், ஒருமுறைதான் கொடுத்துள்ளார் என்றும் ஒப்புக் கொள்கிறீர்கள்... அப்படித்தானே?

பாஸ்டர் ஜோன்ஸ் : யுவர்ஹானர்... ஆபிரகாம் கொள்ளையடித்த பொருள்களில்தான் தசமபாகம் கொடுத்தார் என்று எழுதப்பட்டுள்ள சம்பவத்தை வைத்து,தசமபாகம் கொடுக்க வேண்டுமானால் இப்படி கொள்ளையடித்தால்தான் கொடுக்க வேண்டுமென்றும் தங்கள் சம்பாத்தியங்களில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் மக்களை திசை திருப்ப அரசு வக்கீல் தனது வாதத்திறமையால் முயற்சிக்கிறார்,  மை லார்ட்...

அரசு வக்கீல் : நீங்கள் வேதத்தில் வாசிப்பதைத்தான் நான் உறுதிப்படுத்துகிறேன்.

பாஸ்டர் ஜோன்ஸ் : நீங்கள் ஒன்றை தெளிவுபடுத்திவிட்டு பிறகு உங்கள் ஸ்டேட்மென்ட்டை உறுதிப்படுத்துங்கள். 

அரசுவக்கீல் : எதை தெளிவுப்படுத்த வேண்டும் ?

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆபிரகாம் யார் சொல்லி மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுத்தார்? என்று சொல்ல முடியுமா ?

அரசு வக்கீல் : நான் சட்ட புஸ்தகம் படிக்கிறவன், நீங்கள் தான் வேதபுஸ்தகம் படிக்கிறீர்கள். ஆகவே நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

பாஸ்டர் ஜோன்ஸ் : நன்றி வழக்கறிஞர் அவர்களே, நானறிந்த வகையில் தேவன் ஆபிரகாமின் கீழ்படிதலையும் விசுவாசத்தையும் பார்த்தே அவரைப் படிப்படியாக ஆசீர்வதித்து வந்திருக்கிறார். உன் தேசத்தையும், உன் ஜனத்தையும், உன் வீட்டையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்குப்போ என்று தேவன் கூறும்போது கீழ்ப்படிந்து போனார். பலிபீடம் கட்டினார். பலிசெலுத்தினார். ஆகவே அவரது ஆராதனையையும், விசுவாசத்தையும் அங்கீகரித்த ஆண்டவர் அவருக்கு திரளான ஆடுமாடுகளைப் பெருகப்பண்ணினார்... ஆபிரகாம் மட்டுமல்ல, யாக்கோபும் தசமபாகம் செலுத்தி ஆண்டவரை ஆராதித்திருக்கிறார்கள். இவை வேதத்திலும் எழுதப்பட்டுள்ளன.

அரசு வக்கீல் : அப்ஜெக்ஸன் யுவர் ஹானர். பாஸ்டர் ஜோன்ஸ், ஆபிரகாம் ஒருமுறைதான் தசமபாகம் செலுத்தினார் என்று ஒப்புக் கொண்டவர், தன் விசுவாசிகளை மாதந்தோறும் தங்கள் வருமானங்களிலே தசமபாகம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தியதை மறைக்க, ஆதாரம் தேடி பேச்சை மாற்றுகிறார் யுவர் ஹானர்.

பாஸ்டர் ஜோன்ஸ் : நான் பேச்சை மாற்றவில்லை... யுவர் ஹானர். ஆபிரகாம் மட்டுமல்ல அவன் சந்ததியும் தசமபாகம் கொடுத்துள்ளார்கள். இது தேவன் அவர்களை ஆசீர்வதிக்க காரணமாயிருந்த செய்கை என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன். ஆபிரகாம் மாத்திரம் தற்செயலாய் தசமபாகம் செலுத்தவில்லை. தேவன் அவரோடு பேசினதால்தான் தன் தேசம், ஜனம் யாவையும்விட்டு புறப்பட்டார். அதேபோல தசமபாகம் என்கிற ஒரு வரைமுறையை தேவன் சொன்னதால்தான் கொடுத்திருக்கிறார். 

அதனால்தான் அவரது சந்நிதியில் வந்த யாக்கோபும் தசமபாகம் செலுத்த பொருத்தனை பண்ணியிருக்கிறார் என்கிறேன். இது தேவன் நியமித்த வரைமுறை. தேவன் அவர்களோடு பேசினார் என்பதை(ஆதி 12 : 1-3, 15 : 1-5, 18-21, 17 : 1-16, 28 : 13-15) ஒப்புக்கொள்கிற நாம் இந்த வரைமுறையையும் தேவனே கொடுத்தார் என்று ஒத்துக் கொள்வதில் என்ன தயக்கம்.?
அரசு வக்கீல் : சரி ஆபிரகாமின் சந்ததியில் யார்யார் தசமபாகம் கொடுத்தார்கள் ?

பாஸ்டர் ஜோன்ஸ் : யாக்கோபும் அவருடைய வம்சாவழி 11 கோத்திரத்தாரும் கொடுத்திருக்கிறார்கள் மை லார்ட். ஆதி 28 : 22-ல் தசமபாகம் செலுத்துவேன் என்று யாக்கோபு பொருத்தனை செய்ததாக பார்க்கிறோம்.

அரசு வக்கீல் : யாக்கோபு அங்கே தேவன் தன்னை ஆசீர்வாதித்ததால் மாத்திரமே தசமபாகம் தருவேன் என்று பொருத்தனை செய்ததாக பார்க்கிறோம்  தசமபாகம் தரவேண்டுமானால் முதலாவது தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கே வருகிறது. நாமும் இந்த மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறீர்களா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : நான் அப்படிக் கூறவில்லை. ஆனால் தசமபாகம் செலுத்தவேண்டும் என்று கூறுகிறேன்.

நீதிபதி : பாஸ்டர் ஜோன்ஸ் நீங்கள் மீன்டும் மீன்டும் உங்கள் சுயலாபத்திற்காக வேதத்தை பயன்படுத்தி மக்களிடம் தசமபாகம் வாங்குவதிலேயே குறியாக இருந்து உபதேசிக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. யாக்கோபு தனது பொருத்தனையை எப்படி நிறைவேற்றினான்? என்பதற்கான வேத ஆதாரங்களை இந்த நீதிமன்ற்றத்தில் நீங்கள் சமரபித்தாக வேண்டும். மேலும் யாக்கோபு எங்கு யாரிடத்தில் தசமபாகத்தை செலுத்தினான்?  என்றும்  ஆதாரம் காட்ட வேண்டும். அக்காலத்தில் தேவாலயமோ லேவியரோ இல்லை என்பது உங்களுக்கு தெரியுமல்லவா? 


பாஸ்டர் ஜோனஸ்:-  கூறுகிறேன் மைலார்ட் யாக்கோபு தசமபாகம் செலுத்துகிறேன் என்று பொருத்தனை பண்ணினதை ஒப்புக்கொள்ளுகிறீர்கள் அல்லவா? அதுபோதும் இந்த யாக்கோபுக்கும் சரி, ஆபிரகாமுக்கும் சரி. தசமபாகம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் யாரால் உண்டானது?  தேவனால் உண்டானது. அதனால்தான் பொருத்தனையும் பண்ணியிருக்கிறார்கள்... ஆசீர்வாதத்தையும் தேடியிருக்கிறார்கள்.

அரசு வக்கீல் : யாக்கோபு பொருத்தனையை நிறைவேற்ற தசமபாகம்
கொடுத்தாரா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : யாக்கோபின் பொருத்தனை நிபந்தனைக்குட்பட்டதாகையால் தேவன் அவன் எதிர்பார்ப்பை கவனித்து அவன் ஆசீர்வதிக்கப்படத் தேவையான தொழில் நுணுக்கங்களை... அதாவது ஆடு மேய்க்கிற அவனது தொழில் ஆசீர்வதிக்கப்படும் விதத்தை கனவிலே தெரியப்படுத்துகிறார்.

அரசு வக்கீல் : அப்படி வேதத்தில் எழுதப்பட்டு இருக்கிறதா ?

பாஸ்டர் ஜோன்ஸ் : ஆம், ஆதி 31: 9-13 வரை படித்துப் பாருங்கள். யாக்கோபு தன் மனைவியிடம் தனது மந்தை பெருகிடத் தேவையான ஆலோசனைகளை தேவன் சொப்பனத்தின் மூலம் தனக்கு கொடுத்தார். அதனால்தான் மந்தை பெருகினது என்று சொல்வதை பார்ப்பீர்கள்.

அரசு வக்கீல் : சரி, யாக்கோபு எப்படி அதை நிறைவேற்றினார்.

பாஸ்டர் ஜோன்ஸ் : எல்லாமே பைபிளில் எழுதப்படவில்லை... யுவர் ஹானர் ஆயினும் அவைகளை நிறைவேற்றுகிறவர்கள் அதன் பலனைப் பெறுகிறார்கள் என்பது உண்மை. யாக்கோபு தேவனுக்கு தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லி பொருத்தனை பண்ணினவர், அதை செலுத்தாமல், சூழ்நிலை வசத்தால் தன் சகோதரனுக்கு வெகுமதியாக அதை கொடுத்து சகோதரன் ஏசாவுடன் ஒப்புரவானாலும், தன் மகள் மூலம் கானானியர், பெரிசியர் முன் சாட்சி கெட்டு, வருத்தத்தையும், அவமானத்தையும் அடைந்தார். (ஆதி 34 : 30) அதாவது பொருத்தனையை சரியாய்ப் செலுத்தாதபடியால் இது நேரிட்டது என்று நிதானிக்கத் தோன்றுகிறது.
                                                  - தொடரும்..,

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?