எல்லாம் எங்கள் ஊர், எல்லோரும் எங்கள் உறவுகளே..!


யாதும் ஊரே யாவரும் கேளிர் 
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - (புறம்: 129)
                                          - கணியன் பூங்குன்றனார்

விளக்கம்:

எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள்தான்;
தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;  துன்பமும், அதன் தீர்வும் கூட அது போல்தான். 

செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு. மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல,  

அரிய உயிரியக்கம் ஆனது முன்னர் இட்ட முறைவழியே போகத்தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்] பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]

சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.

பூங்குன்றனார் கணிப்பு

உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.
    மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.
    நன்மை தீமைகளை கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா
                                                                                                                    என்றார்.

சாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.
    வாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.
    பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப்
         பார்த்து அதனை இனிது என மகிழக் கூடாது என்றார்.

வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை 
     முனிந்து வாழ்க்கையே இன்னாது(துன்ப மயமானது) என
                                                                   வெறுக்கக் கூடாது என்றார்.

பிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார்.
   மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது
                                                                                                     என்றார்.

வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு
    போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம்
     பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் -
     என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர
                                                                                                            வைத்தார்)

வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு
      பாறைகளில் மோதிக்கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி
      நம்மைத் தூண்டினார்.

நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில்
      செல்லும் புணை போன்றது என்றார். 
      (ஊழ் = 'முறை' என்பது  ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது 
               உயிர்படகைச் செலுத்தும் துடுப்பு)

 

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?