இம்மானுவேல் ஆப்ரஹாம் ஆகிய நான்....!

ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கும்படி ஜனங்களை வழி நடத்தும் தேவஊழியர்களுக்கும்  ஆவிக்குரிய சபை விசுவாசிகளுக்கும் தைரியமூட்டும் கடிதம்.
பாரம்பரியமான இந்து குடும்பத்தில் பிறந்து வாலிப வயதில் தீவிர இந்துமத வெறியனாக வாழ்ந்த ஒரு வாலிபன் தான் சார்ந்த இந்துமத நூல்களை கவனமாக வாசித்து வந்தான். அதனால் அவனுக்குள் எழும்பின கேள்விகளுக்கு விடைகாண பல்வேறு ஆன்மீகத் தலைவர்களை அனுகியபோது அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை என்பதையும் அவர்கள் திணறியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தான். மட்டுமல்ல, ஒரு சிலர் சொன்ன பதில்கள் ஆன்மீகம் கடவுள் என்று சொல்லத்தக்க விதத்தில் லடசணமுடையதாக இராதபடியினாலே…, கடவுள்கள் என்பதே கட்டுக்கதைகளும், பொய்யும் புரட்டும் அவனவன் பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொண்டதுமானவைகள் எனச்சொல்லி, கடவுள் மறுப்பு அமைப்பான திராவிட கழகத்தில் இணைந்த அந்த வாலிபன் தன்னை இதுவரை ஏமாற்றின இந்து மதத்தையும், அவலட்சணமான அந்தக்கடவுள்களையும், அவைகளின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்கும், எதிராக  தீவிர பணியாற்றினான். அதுமட்டுமல்ல, அந்த வாலிபன் பகுத்தறிவை போதித்து தமிழகத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியவரும், எல்லோராலும் பகுத்தறிவு பகலவன் என்று பாராட்டப்பட்டவருமான, தந்தை ஈ.வெ.ராமசாமி பெரியாருடன் போராட்டங்களில் கலந்து கொண்டான். அதனிமித்தம், அவ்வப்போது சிறைச் செல்ல வேண்டி வந்தது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான். இதன்மூலம் தான் ஏதோ பெரிதாக சாதித்துக் கொண்டிருப்பதாக நினைத்தான் அந்த வாலிபன்.
அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் மிகவும் எளிமையான கிறிஸ்தவ ஊழியர் ஒருவரை சந்திக்க வேண்டியச் சூழல் ஏற்பட்டது. இந்த சந்திப்பைத் தவிர இதுவரை அனைத்தையும் தவறாகவே செய்து வந்திருக்கிறோம் என்று அப்போது அந்த வாலிபனுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த ஊழியரிடம் தனது வழக்கமான பாணியிலே பேசத்தொடங்கினாலும் அவரோ 1பேது3: 15-ன்படி "உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" என்ற வார்த்தையின்படி பதில் சொல்லத் தொடங்கினார். கடுமையான கேள்விகளுக்கும் சாந்தமாக அவர் கொடுத்த ஓவ்வொரு பதில்களும் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் இருந்தது மட்டுமல்ல.. அவர் புறப்படுமுன்பாக ஒரு புதிய ஏற்பாடு பைபிளையும் கொடுத்துவிட்டுப் போனார். அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அந்த வாலிபன் இதற்கு முன்பு தான் ஆய்வு செய்த கிறிஸ்தவ இஸ்லாமிய மத போதனைகளைக்கும் இன்று கிடைத்த பதில்களுக்குமுள்ள வித்தியாசத்தை நன்கு உணர்ந்தவனாய் பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டு பகுதிகளை பயபக்தியுடன் வாசித்தபோதும் பரிசுத்த ஆராதனையில் பங்கு பெற்றபோதும் தனது வாழ்க்கையில் என்றுமில்லா மாற்றங்களை உணர ஆரம்பித்த அந்த வாலிபன் மாற்றங்களை ஏற்படுத்திய மாமன்னரான உன்னத கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தீர்மானித்தான். கிறிஸ்துவினிமித்தமாக உலகப்பிரகாரமான எல்லா வருமானத்தையும் பூர்விக சொத்து சுகங்களையும் துறந்தால்தான் கர்த்தருக்கு ஊழியம் செய்யமுடியும் என்றச் சூழல் வந்தபோது அவைஅனைத்தையும் விட்டுவிலகினார்.
சில வருடங்களில், தங்கம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் பொருட்களின் அடிப்படையிலில்லாமல், கிறிஸ்துவினிமித்தம் பரிசுத்தவான்களான தேவஊழியர்கள் விசுவாசமக்கள் முன்னிலையில் திருமணமும் நடந்தது. தமிழகம் முழுவதும் கர்த்தருக்கென்று வைராக்கியமாக எவ்விடத்திலும் கர்த்தருடைய வேலையை செய்து கர்த்தர் நியமித்த இளைப்பாறுதலில் பிரவேசித்துவிட்ட  உன்னதமான தேவனுடைய ஊழியருக்கு நான்காவதாகப் பிறந்தவன்தான் இந்த "இம்மானுவேல்ஆப்ரஹாம் ஆகிய நான்"
என்னுடைய வாலிப வயதில், எனது தகப்பனாருடைய அர்ப்பணிப்புக்கு எதிராக.. உலகப்பிரகாரமாக சிந்திக்கத் தொடங்கினேன். தேவனுடைய ஊழியக்காரராகிவிட்ட எமது குடும்பம் சந்தித்த வறுமையான வாழ்க்கைக்கு காரணம் கிறிஸ்தவ ஜீவியம் என்று தவறாக உணர்ந்ததால் எனது பாதை உலகப்பிரகாரமானது.. கர்த்தருக்கு பயப்படுகிற பெற்றோரை விட்டு எனது சிறிய வயதிலேயே தொடர்புகளை துண்டித்துக்கொண்டு விலகினேன். எவருக்கும் பயப்படாதவர்களும் இரடசிக்கப்படாதவர்களுமான  உறவுகளுடன் வாழத் துவங்கினேன். சுமார் 26 வருடங்கள் உலகப்பிரகாரமாக வளமையாக வாழ்ந்தேன். எல்லாவற்றையும் எழுத சமயம் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கர்த்தர் விரும்பாத வழிகளிலே குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்தேன். நான் நன்றாக வாழ்ந்து வருவதாக நினைத்த ஓரு நாள் வழக்கத்திற்கு மாறான ஒரு ஒப்பந்தத்தில் கவனம் செலுத்தினபோது நான் பரிசுத்தமான தேவ ஊழியருடைய மகன் என்றும், கர்த்தர் இதை விரும்பமாட்டார் என்றும், உணரத் தொடங்கினேன். அந்த ஒப்பந்தம் மூலம் வரும் வருமானம் அதிகம் என்பதனால் கடவுள் உண்டா? இல்லையா? இருந்தால் பயப்படலாம், இல்லையானால்...! நாம் ஏன் வீனாக பயப்படவேண்டுமென்று? என்று எனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தில் அந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலயத்திற்குப் போவதென்றும் கர்த்தர் இருப்பாரென்றால் என்னுடன் பேச வேண்டுமென்றும் மனதில் தீர்மாணித்தவனாக தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கிற ஒரு ஆவிக்குரிய சபைக்கு கடந்து சென்றேன்.
பிரியமானவர்களே கர்த்தர் என்னுடன் பேசினார். தெளிவாக தேவ ஊழியர் வழியாக மறைவானவைகளை வெளிப்படுத்தி கடந்த காலங்களை நினைவுபடுத்தி எதிர்காலங்களைச் சுட்டிக்காட்டி வேத வசனத்தின் வாயிலாகப் பேசினார். கர்த்தர் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன் தேவனுக்கு பிரியமில்லாத வழிகளை விட்டு விலகினேன். என்னை முற்றிலும் அர்ப்பணித்தேன். அன்று முதல் என் வாழ்வு மாறினது. தேவபயம் உடையவனாக மாறினேன். தேவ ஒழுங்குகள் தேவநீதி என்பவற்றிற்கு கீழ்படிந்தேன். கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். கிறிஸ்தவனுக்குரிய அடையாளங்களோடு வரிசை மாறாமல்  வாழ்ந்து வந்தபோது சில நாட்கள் உபவாசித்து பல்வேறு காரியங்களுக்காக  ஜெபித்து வந்தேன். (உலகப்பிரகாரமான தேவைகளுக்காக அல்ல) அச்சமயம் கர்த்தர் என்னை அழைத்தார். நீ என்னுடைய வேலையை செய்ய வேண்டுமென்றார். நான் இப்போது இருக்கும் கள்ளிகுளத்திற்குப் போகச் சொன்னார். மனுஷீகத்தில் பலவாறு யோசித்தேன். எனக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளுமுன்டு குடும்பத்தை நடத்த வேண்டுமே? மிகவும் தயங்கினேன். மூன்று நாட்களாக என்னுடன் இடைபட்ட கர்த்தர் 3 - ம் நாளில் என்னுடன் பேசினார். சகலமும் உனக்கு ஆயத்தமாக இருக்கிறது என்றார். பல்வேறு அடையாளங்கள் மூலமாக அழைப்பை உறுதிப்படுத்தினார். எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவ அழைப்புக்கு கீழ்ப்படிந்து புறப்பட்டு வந்தேன். இதுவரை கர்த்தர் என்னை நடத்துகிறார் இந்த பகுதியில் முதன் முதலாக ஒரு ஆவிக்குரிய சபையைக்கட்ட உதவி செய்தார். ஊழியத்தை துவக்கின நாள் முதல்..  
  • தசமபாகம் தரவேண்டுமென போதிப்பதில்லை.
  • வெளிநாடுகளில் இருந்து உதவி பெறவில்லை.
  • நகைகளை கழற்றி காணிக்கைப் பெட்டியில் போடு எனச்சொல்வதில்லை.
  • சபையின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கென காணிக்கைகள்      மற்றும் நன்கொடைகள் வசூலிப்பதில்லை.
  • பாடல்தாள் பாடல்புத்தகம் காலாண்டர் போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்யாமல் இலவசமாகவே விநியோகிக்கிறோம்.
  • சிறுமைப் பட்டவர்கள் மேல் சிந்தை உள்ளவர்களாக மருத்துவ மற்றும் குடும்ப பராமரிப்புகளுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்கிறோம். 
  • எங்கள் சபையில் நானோ மற்ற எவருமோ காணிக்கை பிரசங்கம் செய்ததில்லை.
  • எமதுசபையின் விளம்பரங்களிலோ வெளியீடுகளிலோ இணையதளத்திலோ காணிக்கை அனுப்பச் சொல்லும்படியான எவ்வித வாசகங்களும் இல்லை.
  • இரட்சிக்கப்பட்ட ஜனங்கள் தேவனுடைய சரீரமான சபையின் தேவையறிந்து உதாரத்துவமாகக் கொடுத்து சபையைத் தாங்குகிறார்கள்.
  • எமது சபையின் வரவு-செலவு கணக்குகளை சபை மூப்பர்கள் விசுவாசிகள் ஏற்க முன்வருவதில்லை. தேவனுக்கும் சபையில் உள்ளவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விரோதமாக இங்கு எதுவும் நடைபெறவில்லை.
  • சபையின் வரவு செலவு கணக்குகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் எமது சபையில் வந்து ஐக்கியமாகும்படி அன்புடன் அழைக்கிறோம்.  
  • தனிமையில் வீடு சந்திக்கப் போகிறதில்லை. அச்சமயங்களில் எங்கும் காணிக்கை வாங்குகிறதில்லை.
  •  தனிமனித ஒழுக்கத்தில் நான் தவறினதில்லை அதற்கு என்னுடைய மனைவியும் எமது சபையும் விசுவாசிகளல்லாத மற்றவர்களும் அறிவர். நான் ஊழியம் செய்யும் பகுதி பட்டணம் அல்ல. கிராமம்.
  • எவ்விதத்திலும் எங்கும் சாபமான வார்த்தைகளால் மிரட்டுவதில்லை. துதிக்கிற எங்கள் வாயிலிருந்து சாபம் புறப்படுவதில்லை. தவறுதலை மீறுதலை எல்லைதாண்டிய கண்டனக்குரலை கண்டிக்க எப்போதுமே தயங்கியதில்லை. காரணம் இது வன்முறையில்லை. விதிமுறை.
நான் மேலே வரிசைப்படுத்தியவைகளை எமது சபையில் உள்ள விசுவாசிகள் பார்வையிட்ட பின்பே, எனது முகப்புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடுகிறேன். கர்த்தர் என்னை இதுவரை நன்றாக நடத்தி வருகிறார். இந்த கம்ப்யூட்டரை எனக்கு பரிசளித்த குடும்பத்தாரும், எமது சபை விசுவாசிகளில் சிலரும், எமது சபையைப் பற்றி நன்கு அறிந்தவர்களும், உங்களுடன் இணைந்து இதை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் மற்ற ஊழியங்களுடன் என்னை ஒப்பிடுவது இல்லை. இக்கடிதத்தின் இறுதியாக :- 
மேலே வரிசைப் படுத்தியுள்ளவைகள் வேதத்திற்கும், வேத ஒழுங்குக்கும் எதிரானவைகள் அல்ல, ஆனால்....., 
"சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்பட... (1கொரி 14:40) வேண்டும்"
                                                                                                                    – தொடரும்

Comments

  1. காணிக்கை சம்பந்தமான காரியங்களில் நீங்கள் முழுக்க முழுக்க வேதத்த்துக்கு முரணான கொள்கைகளை அறிவித்திருக்கிறீர்கள்;நாம் நம் தேவனை பரியாசம் பண்ணலாமா..?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?